August 22, 2009

வீடியோ:உலகம் முழுதும் இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:WHO எச்சரிக்கை

உலகம் முழுவதும் பன்றி காய்ச்சல் வைரஸ் இன்னும் சில மாதங்களில் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெக்சிகோவில் உருவாகிய பன்றி காய்ச்சல் அமெரிக்காவுக்கு பரவியது. அங்கிருந்து வந்த விமான பயணிகளால் உலகின் பல நாடுகளுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியது. இதற்கு காரணமான எச்1என்1 வைரஸை உடனடியாக ஒழிக்க இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை.

இதனால் இந்த கொடிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 82 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய்க்கு 177 நாடுகளில் மொத்தம் 1,799 பேர் பலியாகியுள்ளனர் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் இந்நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் இன்னும் சில மாதங்களில் எச்1என்1 வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும். மூன்று அல்லது நான்கு நாள் இடைவெளியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்துக் கொண்டே இருக்கும். இது பல மாதங்கள் தொடரும் அபாயம் உள்ளது.

இந்நோய்க்கு பலர் பலியாகலாம். மழைக்காலம் தொடங்கவுள்ளதால் இந்த வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்த நிலையை சந்திக்க உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த வாரம் முதல் ஒரு நாளைக்கு குறைந்தது 90 பேர் முதல் அதிகபட்சமாக 220 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். புனே(18%), மும்பை(17%), டெல்லி(16%), கர்நாடகம்(7%), ஆந்திரா(4%), தமிழகம்(5%), குஜராத்(2%), அரியானா(2%) ஆகிய எட்டு இடங்களில் மொத்தம் 81 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார மைய இயக்குனர் மார்கரட் சான் அளித்துள்ள பேட்டியில் பன்றி காய்ச்சலின் கொடூர பாதிப்பு முடிந்து விட்டதா அல்லது இனிமேல்தான் ஏற்படுமா என இப்போது கூறமுடியாது. ஆனால் இந்த வைரஸின் அதிரடி தாக்குதலை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.